Friday, December 19, 2008

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும்.....

இன்று உங்களிடம் " வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும் " என்ற வாக்கியத்தின் உண்மையை தெரிந்தளவிற்கு, அறிந்தளவிற்கு எடுத்துரைக்கலாம் என்று எண்ணியிருக்கிறேன்.

மானிடப்பிறவி எடுப்பதற்கே மாதவம் செய்திடவேண்டும்...அதிலும் பாருங்க..மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஒரேயொரு அறிவுதான் வித்தியாசம். அதிலும் இரு இனங்களையும் பிரித்துக்காட்டவேண்டுமானால் ஒரு சின்ன உதாரணம்.....மனிதர்கள் வாய்விட்டுச் சிரிக்கத்ததெரிந்தவர்கள்.


மிருகங்கள் அப்படியில்லை. யாரும் சிங்கம் சிரித்தது கண்டிருக்கிறேன், பூனையும் சிரித்தது கண்டிருக்கிறேன் என்றால் சந்தோசப்படுவேன்... ம்....எழுத வந்த விசயத்திற்கு வருகிறேன்....

நாம வாழ்க்கையில எத்தனையோ துன்பங்கள், இன்பங்கள் என்று அநுபவிச்சுக்கொண்டு வருகிறோம்...இதிலும் பார்த்தீர்களென்றால் எம்மை வாட்டுவது துன்பம்தான். இன்பம் வரும் போது முகமலர்ச்சிபெறுகின்றோம். எல்லோருடனும் மனச்சந்தோசமாக பேசுகின்றோம், எந்தக்காரியமாக இருந்தாலும் மகிழ்வோடு செய்கின்றோம்.இதற்குக்காரணம் மனமகிழ்ச்சி. இதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு பார்த்தால்...சிரிப்பு எவ்வளவு பெருமதிமிக்கது என்பது விளங்குகிறது..மனிதர்களிலும் எல்லோருக்கும் இந்தமாதிரியான மனமகிழ்வான சிரிப்புவந்து அமையாது.

சிலபேரைப்பார்த்தீர்களென்றால்....அவங்க பேசுவதிலே நகைச்சுவை கலந்து...மற்றவர்களை சிரிக்கப்பண்ணிக்கொண்டே நகைச்சுவையாகப் பேசிக்கொண்டேயிருப்பார்கள். அது அவர்களுக்கு கடவுள் கொடுத்தவரம் எனலாம். சிரிப்பதிலும், அடுத்தவரையும் சிரிக்கச்செய்து மகிழும் காணும் மனிதர்கள் இன்றைய அதிவேகமான உலகில் மிகவும் குறைந்து செல்லுகின்றது.


ஆனாலும் யாருமே கற்றுக்கொடுக்காத அந்த இயல்பான பண்புடையவர்கள் யாரானாலும் வாழ்த்தப்படவேண்டியவர்கள்..அவர்களைச்சுற்றி ஒரு அன்பான கூட்டம்தானாக உருவாகும்...அவர்களோடு தினமும் பேச மனம் ஏங்கும்...எந்தக்கவலையானாலும் அவர்கிளிடத்தில் சொல்லிப்போக்க மனம் அவர்களை நாடும்.சிலபேரைப்பார்த்தால் சிரிக்கவே மாட்டார்கள்.....உம் என்று அடம்பிடித்துக்கொண்டு இருப்பார்கள்....அவர்களும் நல்லவர்களேதான்....ஆனாலும் அவர்கள் முகம் அதனைக்காட்டிக்கொடுத்துவிடும்.

நீங்கள் எப்படியோ அறிந்துகொள்ளுங்கள் உங்களை நீங்களே...... இந்தச்சிரிப்பிலும் பலவிதங்கள் இருக்கின்றன....ஏளனச் சிரிப்பு, நக்கல் சிரிப்பு, நமட்டுச்சிரிப்பு, கொடுப்புக்குள் சிரிப்பு, இன்னும் பற்பல...நமக்கு வேண்டியதெல்லாம் மனமகிழ்வான சிரிப்பு மட்டும்தான்....இப்பொழுது அமேரிக்க டாக்டர்களாலேயே...நிரூபிக்கவிட்டது.....நோய்கள் உடம்பை தாக்காதிருக்க சிரிப்பும் ஒரு பயிற்சியாக மேற்கொண்டுவருவது சிறந்தது என்று..உண்மைதான்.ஒரு சின்னச் சம்பவம்....உங்களுக்கும் சிரிப்பு வந்தால் சந்தோசம்.

ஒரு பிறந்தநாள் விழாவைபவம்....அங்கே மேசைமீதிருந்த கரண்டிகள் என் கணவர் கையில் எடுத்துக்கொண்டார்.எங்கள் மேசையைச்சுற்றியிருந்த கதிரைகளில் இன்னுமொரு அறிந்த நண்பர்கள். குழந்தையோடு.....குழந்தையை நான் வைத்திருந்தேன்....அங்கே ஒலிபரப்பப்பட்ட பாடல் இசைபோதாது என்று கையில் வைத்திருந்த கரண்டிகளால் அந்த மேசையில் தாளம் போட்டார்.

என் கணவர்...குழந்தை சிரித்தது........9 மாதக்குழந்தை.......ரொம்ப நல்லா சிரித்தாள்..... .அதனைப்பார்த்து எல்லோரும் சிரித்தோம்....அதன் பிறகு எதற்கோ என் கணவர் மியூசிக் எழுப்புவதை நிறுத்திவிட்டு அவர்களோட பேச வாய் எடுக்க...அந்தக்குழந்தை அழுதிடிச்சு.......அட ஏன்டா அழுகிறது என்று எனக்கும் புரியவில்லை..குழந்தையின் அம்மா...வாங்கிக்கொண்டாங்க.அப்பவும் குழந்தை அழுகை நின்றபாடில்ல...எல்லாமே கொடுத்துப்பார்த்தோம் அழுகை நிற்கவில்லை.

மீண்டும் என் கைகளில் குழ்நதை....என் கணவர் கரண்டிகளை கையெலடுத்தார்......அட பாருங்க கப்புன்னு அழுகையை நிறுத்திடிச்சு.அப்புறமாத்தான் தெரிஞ்சது இவர் போட்ட மியூசிக்கில குழந்தை ரொம்ப மகிழ்சியடைஞ்சிருக்கு என்று....அப்புறம் என்ன இவர் குழந்தை தூங்கும் வரை ஒரே மியூசிக்தான்....இப்பநினைச்சாலும் சிரிப்பாகத்தானிருக்கு..

இதுபோல எத்தனையோ.குட்டிகுட்டி சந்தோசமான நிகழ்வுகள். சிரித்து மகிழ்பவன் மனசில எந்தக்கவலை வந்தாலும் அதிக காலம் இருந்து வாட்டப்போவதில்லை.. அன்பாகப்பேசுங்க....வாழ்வில் நடந்த சின்னச்சின்ன நகைச்சுவைகளை நினைச்சுப்பாருங்க.எழுதுங்க.........உங்கள் மனது மகிழ்வைப்போல மற்றவங்க மனசுகளையும் மகிழவையுங்க....போனதிற்காக வருத்தப்படாதீங்க...இருப்பதை எண்ணி சந்தோசப்படுங்க.....வாய்விட்டுச்சிரியுங்க.....நிஜமாக நோய்விட்டுப்போகுமுங்க....நல்ல நகைச்சுவைச் சம்பவங்களை உறவுகளோடு பேசிமகிழுங்க....இதயம்கனமாயிருக்காது நின்மதியாகக்கூட இருக்குமுங்க....அதற்காக தேவையில்லாததெற்காலாம் சிரிக்காதீங்க..பார்ப்பவன் பைத்தியக்காரன் என்றுவிடுவானுங்க....நகைச்சுவைப் படங்களைப் பாருங்க....மனம்விட்டு மகிழ்ந்திருங்க......நம்ம நிலாகூட மனங்கள் மகிழ்ச்சியாகயிருக்க நிலா டி.வி....யில நகைச்சுவைப்படங்களை இணைச்சிருக்கிறாரு......அதையும் பாருங்க...வாழ்க்கையை மகிழ்சியுடையதாக மாற்றிப்பாருங்க.....அதுவே நல்ஆரோக்கியமான வாழ்விற்கு சிறந்த வழிபாருங்க...

சரி பிள்ளைகளே மீண்டும் அடுத்த அட்வைசோடு உங்களைச் சந்திக்கமுன்பு எல்லோருக்கும் நல்ல பொழுதாக அமையவேண்டிவிடைபெறுகிறேன்.
உங்கள் அன்பு மதி.

குறள் ஒன்று..

இடுக்கண் வருங்கால் நகுக
அதனை அடுத்தூர்வது அஃதொப்பது இல். (621)

விளக்கம்:துன்பங்கள் வரும்போது மனம் தளராமல், நகைத்து ஒதுக்குக. துன்பங்களைக் கடப்பதற்கு அதனை விடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை.

Tuesday, December 2, 2008

" உடற் பயிற்சி "

சென்ற பொழுதுகளில் "இறப்பு" என்ற சொல்லோடு உங்களைச்சந்தித்தேன்....
இன்று உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமாகத் தேவைப்படும் பயிற்சி என்ன என்றதை விளக்குமுகமாக " உடற் பயிற்சி " என்ற சொல்லை தேர்ந்தெடுத்து கூற வந்துள்ளேன்..

நாம் ஆரோக்கியமாக வாழ உணவு மட்டும் முக்கியமானதல்ல...நமது உடலில் தேங்கியிருக்கும், தேவையற்றவற்றை கரைப்பதானால் உடற்பயிற்சி மிகவும் அவசியமானது. நான் தினமும் வேலை செய்கிறேனே....எனக்கு எதற்கு......? என்று கூறுவோருமுண்டு. நாம் இதைச்செய்வதால் என்ன பலன் என்று அலட்டிக்கொள்வோருமுண்டு...எல்லாவற்றிக்கும் காரணம் நமது மனம்தான். உடற்பயிற்சி செய்வதால் பல நன்மைகள் நமக்கு ஏற்படுகின்றது.

துரித இரத்த ஓட்டம், மூளை இயக்க வேகம் அதிகரித்தல், தசைகளின் இறுக்க நிலை, தேவையற்ற கொழுப்புச்சத்து கரைதல், தன்னநம்பிக்கை வளர்தல், பொலிவான தோற்றம், அதிகமான எடை குறைதல், தேவையற்ற கழிவுப்பொருட்கள் வெளியேறுதல், சோம்பல் இல்லாமை, வயது போனபின் வரும் உபாதைகளை தடுத்தல், சீரான சுவாசம் இப்படிப் பல பல நன்மைகளைப் பெறலாம்.உடல் மெலியவென மாத்திரைகளை நாடுவதும், தம்மைத்தானே வருத்துவதும், கவலையில் வாடுவதும் தேவையற்றதொன்றாகும்.

நம்மால் எந்தளவிற்கு உடற்பயிற்சி செய்யமுடியுமோ அதனை மட்டும் செய்ய வேண்டும்...காலையில் வழமையைவிடத் தினமும் அரைமணி நேரத்திற்கு முன்பாக எழுந்து இறுக்கமான உடை அணிந்து, காலுக்கு நல்ல சப்பாத்தும் அணிந்து கொண்டு ஓடுதல் சிறந்த உடற்பயிற்சியாகும்.இதைவிட நீச்சல் தெரிந்திருப்பின் வாரம் ஒரு தடவையாவது நீச்சல் உடற்பயிற்சி செய்வதும் மிகவும் உன்னதமானது. வயது போனவர்கள் ஓட முடியாது விட்டால் வேக நடைகூட மிகவும் பலன் தரும்.


உடற் பயிற்சி நிலையங்களைக்கூட வாரம் 3 முறை என நாடலாம். அல்லது வீட்டிலேயே சாதாரண உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். எல்லாவற்றிக்கும் மேலாக விரும்பிய பாடல்களைப்போட்டுவிட்டு ஆடி மகிழ்வதே சிறந்த உடற்பயிற்சியாகும்.நன்றிகள் பிள்ளைகளே..... இதுவரை எழுதியதே அதிகம். அதனால அனைவருக்கும் நல்லபொழுதாக அமையவேண்டி பாட்டி அடுத்த அட்வைசுடன் சந்திக்கிறேன்...



எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல். (489)

விளக்கம்:
கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்தபோது, அப்போதே, நாம் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்து வெற்றிபெற வேண்டும்.

***************************************************
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி.

Friday, November 28, 2008

" இறப்பு "

நலமாக இருக்கிறீர்கள் தானே உறவுகளே...

நீண்ட நாட்களுக்குப்பின்பு உங்களோடு பாட்டியின் அறிவுரை. சென்ற முறை " ஏமாற்றுதல் " பற்றி எழுதியிருந்தேன். இம்முறை நாம் வாழ்வில் சந்திக்கும் " இறப்பு " பற்றி கலந்தாலோசிக்கலாம் என்று வந்துள்ளேன்.

வாழ்க்கையில நாம எதைவேண்டுமென்றாலும் இழக்கத்தயாராகயிருக்கிறோம். பணம், பொருள், உடமை இப்படியான உயிரற்ற எதைவேண்டுமென்றாலும்..ஆனா மனித வாழ்வில் ஒரு உயிரை இழக்கப்போகிறோம் என்று தெரிந்தால் அதனை ஏற்கக்கூடிய மனப்பக்குவத்தை ஆண்டவன் யாருக்கும் கொடுக்கல்ல. அந்த இழப்புக்குப்பின்னால ஒவ்வொரு உயிர்களும், உறவுகளும் அழுது..அழுது இன்னும் நினைக்கும் போதெல்லாம் கண்களை கசக்கிக்கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கிறாங்க என்பது உண்மை.

இப்படியாக ஒரு இறப்பிற்குப்பின்னால இருப்பவர்கள் அவரை நினைத்து அழுந்துகொண்டேயிருந்தால் அந்த ஆத்மா சாந்தியடையுமா...? இவர்கள் அழுவதை அந்த ஆத்மா விரும்புமா..? இல்லை.ஒருபோதும் அநுமதிக்காது என்று முன்னைய ஏடுகள் எடுத்துச்சொல்லுகின்றன.

அதனால நாம நம் கடமைகள் முடிந்த பிற்பாடு....இறந்தவர் நமக்குக் காட்டிய உயர் பண்புகள், நல் பழக்கவழக்கங்கள், மற்றவர்களை அநுசரித்துப்போகும் நல் பழக்கவழக்கங்கள், நல்வழிகாட்டிகள் யாவையும் நல் வழியில் பின்பற்றி....வாழ்ந்தார் அவரைப்போல பேர் சொல்லும் பிள்ளையாக வாழ்கிறார்கள் என்று மற்றவர்கள் பார்த்து புகழ்ந்து போற்றும் அளவிற்கு நல்மனிதர்களாக நாமும் வாழவேண்டும்.

இருக்கும் போது முடிந்தளவு, எம் அன்பால் அவர்களை திருப்திப்படுத்தி சந்தோசமாக வைத்திருக்கவேண்டும். இதனை எழுதும் போது ஒரு கற்பனைக்குட்டிக்தை ...

ஒரு வயசான அப்பா, அம்மா...பிள்ளைகளோ வெளிநாட்டு வாழ்க்கை பெரும் பிஸியான வாழ்க்கை. யாருமற்ற அவர்கள் சந்தோசம் காணவேண்டி வயோதிபர் மடத்தில தஞ்சம். அப்பாடா ஒருவாறு சேவ்ட்டி பிளேஸ் என்று பிள்ளைகள் நினைக்க விதி அவர்களில் ஒருவருக்கு( தந்தை) விபரீதம்....இறந்துவிட்டார். இருக்கும் அடுத்தது பெற்றதாய். இனியாவது தன் பிள்ளைகள் தன்மீது அக்கறை கொள்ளுவார்கள் என்று நினைத்து நினைத்து ஏமாற்றம்........நாளடைவில் அம்மையும் சிவபாதமடைந்துவிட்டார்.

பெருவிழாக்கோலம் போட்டு மண்டப ஒழுங்கமைத்து பத்து வயதில் நடந்த சம்பாஷனைகள் அட்டைபுத்தமாகி.....பாருங்கள்.....இது அவசியமா...? இங்கு நான் யாரையும் குறிப்பிடவில்லை. இதுதான் இன்றைய நிஜம்.

அதனால நாம நமது உறவுகளோடும் சரி....ஏனையவர்களோடும் சரி அன்பாகப்பேசி, அவர்களை நேசித்து இருக்கும் போதே நல்ல சந்தோசமாக வாழ்வோம்.

என்ன பிள்ளைகளே அப்ப நான் போயிட்டு வாறன்....

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு.
(75)
விளக்கம்:
இவ்வுலகத்தில் இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு, அவர் அன்புடையவராய் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயனே என்பர்.
************************************************************************************

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும்
தனிமதி.

Friday, November 14, 2008

"ஏமாற்றுதல்"

சரி....யாருக்கும் எந்தக்குறையும் ஏற்படாதவாறு இன்று " ஏமாற்றுதல்" பற்றி என் அறிவிற்குத் தெரிந்த அறிந்த விடயங்களைப்பற்றி எழுதுறேன் பாருங்க.

இந்த உலகமே ஒரு ஏமாற்றுவிதம்தான். கள்ளம் கபடமில்லாத குழந்தைக்குக்கூட தாய் நிலாவைக்காட்டி, ஏமாற்றிச் சோறு ஊட்டுவாள். நித்திரைக்குப்போனால் அங்கேயும், பொக்காண்டி வா...வா...பிள்ளை நித்திரை கொள்ளேல்ல வந்து புடிச்சுக்கொண்டு போ.போ.

ம்.....ஆச்சா...
அப்புறம் பாடசாலையில ஆசிரியரை ஏமாற்றுவது. ஆனா இதுவெல்லாம் யாரையும் பெரிசா பாதிக்காது. அது அவனோடையே போயிடும். ஆனா மனுசனாகிட்டா சில ஜென்மங்கள் செய்கிற வேலையிருக்கே இதுகளும் வாழவேண்டுமா என்றிருக்கும்.

இப்படியே வளர்ந்து ஒன்று நன்மை அடையவேணும் என்பதற்காக இன்னொன்று ஏமாற்றிவாழுவது. இது அன்றுதொட்டு காணுகிறோம். சரி....அதையாவது பொறுத்துக்கொள்வோம். ஆனா பாருங்க..

மனிதன் என்று 2 கையும், 2 காலும், முழுசான உருப்படியா பிறந்தும் அழுக்கான மனசா வாழுறாங்களே சிலபேர்கள்.....அவங்க செய்கிற ஏமாற்றுத்தனமிருக்கே மன்னிக்கமுடியாதது. நிச்சயமாகச் சொல்லுவேன். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் ஏதோ ஒரு வகையில அவன் அநுபவிச்சிருப்பான் அந்த ஏமாற்றத்தை.

அது காதலாக இருக்கட்டும், ஏன் அப்படி.? இப்படிச் சொல்வோம், பொன், பொருள், பெண், ஆண் இதில எதுவானாலும் அவன் பாதிக்கப்பட்டிருப்பான். இந்த ஏமாற்றம் தனிய ஏமாற்றம் இல்லை. இதற்கு இன்னுமொரு பெயரும் உண்டு. அதுதான் " நம்பிக்கைத்துரோகி"

இவற்றை எவ்வாறு இனங்காணுவது..? முடியாது முடியவேமுடியாது. நமக்கு அநுபவம் என்று ஒன்று வந்தால் மாத்திரம் காணலாம். அடுத்ததடவை உசாராகயிருக்கலாம். தலைமுட்டிய பின்புதான் புரியும், பதிவான நிலையின் கட்டிடம். அடுத்ததடவை...நாம பார்த்துப்போயிடமாட்டோமா என்ன..?

ஒரு உண்மைச்சம்பவம்

ஊரில ஒரு சாப்பாட்டுக்டை ( ஹொட்டல்) வைத்திருக்கும் முதலாளி அவர். காலையில கடைதிறந்து அப்பனே முருகா, அல்லாஹ், அந்தோணியாரே என்று சகலரையும் பெரிசா மாட்டி ஆகவேண்டியவகைளைச் செய்து, தடித்த ஒற்றை திருநீறுடன் நடுவில ஒரு குங்குமமு்ம் சந்தனமும் கலந்த நச்சுன்னு ஒரு பொட்டு.

ஊரில செல்வாக்குதான். ஆமியென்ன, போலீஸ் என்ன? அனைவரும் அவருடைய சொல்லுக்கு அலுவல்நடக்கும். ( லஞ்சம் கொடுத்தாதானப்பா.. )
அதே ஊரில இந்த ஓனருக்கு ஒரு சொந்தம் மாமா என்று அழைக்கப்படும் அவருக்கு, காணிப்பிரச்சனை. இக்கட்டான சூழ்நிலை. இன்ஸ்பெக்டருடன் பேசவேணும். அயலவர்களால வாய்த்தர்க்கம் வேறு பிரச்சனை. நம்மாளு ஓனர் இதுக்கெல்லாம் தலையைக் காட்டமாட்டார். ஆனாலும் மாமா விடுவதாகவில்லை. ஒரே பிடியாய் ஒனரை பிடித்துக்கொண்டார். சரி நாளைக்கு 2 பெரும் போய் இன்ஸ்பெக்டரை சந்திப்போம் என்று சொல்லிவிட்டார். மாமாவும், காலை 7 மணி தொடக்ம் 1 மணி வரை பார்த்தார். ஓனர் வரவேயில்ல. மாமாவிடம் ஒரு டப்பான் சயிக்கிள் வேறு அதையும் உதைஞ்சு உதைஞ்சு கடைக்குப்போய்ப்போய் ஏமாற்மாக வந்தார். கல்லாபெட்டி ( காசுவேண்டும் இடம்) அருகில் அவரிடத்தில் வேறு ஒருவர். ஐயா இன்னும் வரல்லை ஐயா. இதுதான் பதில்.( கல்லாபெட்டிக்கு எதிராக டீ போட்டுக்கொடுக்கும் இடம். எல்லாமேகடை வாசல் அருகில்தான்.)

மாமாவிற்கு வஞ்சகமில்லாத மனசு. அட என்னதான் இவனுக்கு நடந்தது என்று மனசுக்குள்ள படபடப்பு.

சரி......என்றிருக்க...நம்மப்போல ஒன்று மாமாவிற்கு பிரையின்வோஷ் பண்ணிச்சு. மாமா அதுபோலவே வழமையாகப்போகும் நேரான பாதையில செல்லாம அடுத்த ரோட்டால சுற்றி வர நேரே கல்லாப்பிட்டியில ஹி.......என்ற படி ஓனர். அட மாமாவா வாங்க! வாங்க! பாலு.மாமாவிற்கு சூடா ஒரு கப் பால். என்றபடி..

சரி....அதற்கு பிறகு உங்களுக்குப் புரிந்திருக்கும். இதில பாருங்க.ஓனருக்கு டிப்ஸ் கொடுப்பது அந்த டீ ஆத்தும் பாலுதான்..மாமாவின் சயிக்கிள் நேர வர அவர் அங்க வாறார் மாமா என்று சொல்ல....இவர் ஓனர் கதிரைக்கு கீழே தலையை மட்டுமல்ல உடம்பையும் வளைச்சு திணிக்க...அந்த இடத்தில வேறு ஒருவர் பதில் சொல்ல.......பிறகு மாமா போக ஓனர் தலையை நிமிர்த்த இப்படியே 4, 5 தரம் நடந்துவிட்டது. மாமா எதிராகப்போனபோது அவரால எதுவும் செய்யமுடியவில்ல...வசமா மாட்டு.

பாருங்க...இப்படியெல்லாம் தேவையா..? நாம யாரையும் ஏமாற்றிப் பிழைக்கும் மட்டும், நாமக்கு நாமே சாவுக்குழி தோண்றுவது போலாகும்.
திருமணம் முடித்த ஆணோ, பெண்ணோ தங்களை மணமுடியாதவர்களாக ஏமாற்றுவது, எதுக்கெடுத்தாலும் பொய்பேசி அடுத்தவர்களை ஏமாற்றி தன்வலையில விழவைப்பது. இது நாட்டிற்கு நாடும் தொடர் சங்கிலியாக வளர்ந்து கொண்டுவருகின்ற கொடிய வைரஸ்.

முடிந்தவரையில அடுத்தவரைப் ஏமாற்றிப் பிழைப்பு நடத்துவதை விடுத்து....
அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் ஏமாற்றுங்கள். ( அதாவது ஒரு லீவு எடுக்கவேணும் பொய்யான தகவல் கொடுத்தால்தான் தருவார்கள் என்றிருந்தால்...இப்படியான சொந்தத்தேவைகள்..)
அடுத்தவரை ஏமாற்றாமல் முடிந்தவரையில் உண்மைபேசி வாழ்வோமாக.


" சிலபேரை சிலகாலம் ஏமாற்றலாம்"

"பலபேரை பல காலம் ஏமாற்றலாம்"

" எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்றமுடியாது."


விடிகின்ற பொழுது எல்லோருக்கும் நல்ல பொழுதாக அமையட்டும். என்று கூறி அனைவருக்கும் டாட்டா...



--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

www.nilafm.com

Wednesday, November 12, 2008

" கடன் "

பிள்ளைகள் எல்லோரும் நலம் தானே...

பாட்டியும் நல்ல சுகம். சென்ற முறை உங்களுக்கு " மனஅழுத்தம்" பற்றி அழுத்தி அழுத்தி சொன்னனான் தானே. இந்த முறை " கடன் " பற்றி எடுத்துவிடலாம் என்று இருக்கிறேன்.

அப்பப்பா பொல்லாத சொல்லப்பா இது. வேண்டியவனும் நின்மதியாய் இருந்ததில்லை, கொடுத்தவனும் நின்மதியாய் இருந்ததில்லை. அப்ப என்னதான் செய்யலாம், வேண்டாமல் விடுவதா??? அல்லது கடன் கேட்டாலும், உயிர் போனாலும் கொடுக்காமலே விடுவதா..???

இல்ல அப்படியான எண்ணம் யாருக்கும் வரக்கூடாது. மற்றவர்களின் அவசரதேவைக்கு எங்களிடம் இருப்பதை கடனாக கொடுப்பதால் அதை பெற்றுக் கொண்டவன்மட்டுமன்றி அதனால பிரையோசனப்பட்டவர்களும் உங்களை, எங்களை வாழ்த்துவார்கள். ஆனால் யாரை நம்புவது பணத்தை
வேண்டிக்கொண்டு எஸ்கேப்பானால் என்ன செய்வது..? என்று நாங்கள் யோசிக்கதான் வேண்டும்.


இதுவரையில் யாருக்காச்சும் கேட்டவரம் அத்தனையும் தெய்வம் கொடுத்திருக்கா..? இல்லைத்தானே..அதுபோலத்தான் இதுவும் நாம நம்பிக்கை வைக்கிறோம் கொடுக்கிறோம். அந்தக் கடன் திரும்ப நமக்கு கிடைத்தால் கண்டு கொள்ளவேண்டியதுதான். அப்படி கிடைக்காவிட்டால்....நன்னா அவங்களை சபிச்சுட்டு இருக்கவேண்டியது தான்.

ஆனா ஒரு விசயம்...கடன் வேண்டினவங்கதான் இதில மனிதநேயத்துடன் நடக்கவேண்டும். தங்கள் தேவைக்கு இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி காரியத்தை பெறுவார்கள், அதன் பின்பு சண்டைக்கு நிற்பார்கள். வேண்டினான்தான்....இப்ப அதற்கு என்ன வசதிவரும் போது தரலாம் என்பார்கள். ( எல்லோரும் அப்படியில்ல பாருங்கோ.)

நாம சாப்பிடும் பழத்தை சாப்பிட்டு அறிந்து கொள்ளலாம், புளிப்பா, இனிப்பா, கசப்பா என்று.ஆனா......பாருங்கோ...இப்படியான யோக்கியன் மாதிரி நடக்கும் அயோக்கியவன்களை பழகினாலும் அறியமுடியாது. பொதுவா மனிதரை அறியவே முடியாது..

இப்ப நான் என்ன சொல்ல வாறன் என்றால்.......கடன் வாங்குவதில் இருக்கிற பக்குவம், நேர்மை, விசுவாசமான பேச்சு, எல்லாம் திருப்பி கொடுக்க வேண்டும் என்றதிலும் இருக்கவேண்டும். அப்படித்தவறின் உரியவர்களிடம் உங்கள் கஷ்ட நிலமைகளைச்சொல்லி தவணை கேட்கவேண்டும். இதுவே மனிதநேர்மை.

என்ன பிள்ளைகளே உங்களில் யாருக்காச்சும் இந்த கொடுக்கல் வாங்கல், பிச்சல் புடுங்கல் அநுபவம் இருக்கோ...
அப்ப சரி பிள்ளைகள் நானும் போயிட்டு வாறட்டோ...கனக்க எழுதிப்போட்டன் போலயிருக்கு..

இருக்கிற பொழுது எல்லோருக்கும் நல்லதாக அமையட்டும்.

டாட்டா



நிலம் பார்த்து நாற்று நடு
நல்ல மனம் பார்த்து கடன் கொடு.


--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

" மன அழுத்தம்"

பிள்ளைகள் எல்லோரும் நலம் தானே...
பாட்டியக்கா.. இதற்கு முதல் உங்களுக்கு" பொய் பேசாமை " பற்றி தெரிந்ததை சொல்லியிருந்தேன்.
இன்று " மன அழுத்தம்" பற்றி சொல்லுகிறேன். நன்னா கேட்டுக்குங்கோ...

ஒவ்வொரு உயிருள்ளும் அறிவு தொடங்கிய நாட் முதல் மனஅழுத்தம், மன உளைச்சல் ஏதோ ஒரு வகையில் ஆட் கொண்டுதான் வருகிறது.
குயிலுக்கு தன்னால் ஒரு கூடு கட்டமுடியவில்லையே என்ற கவலை.
மண் குடிசையில் இருப்பவனுக்கு கல் வீடு கட்டமுடியவில்லையே என்ற வருத்தம்.
சிலருக்கு நல்ல வரன் கிடைக்கவில்லை என்ற கவலை.
பலருக்கு தமக்கு வந்த வியாதி பற்றி கவலை.
இப்படி பலவிதங்களில் பலவிதமான கவலைகள் ஒவ்வொரு மனிதருள்ளும் வேரூண்டி வளர்ந்து கொண்டேயிருக்கின்றது.
நாம சதா திரும்பத் திரும்ப இதனையே சிந்திப்பதால் கேடு நமக்குத்தான்.

சரி..இதற்கு என்னதான் பரிகாரம்...

எம்மை ஆட்கொள்ளும் இந்த மன உளைச்சல், எதுவென்று முதலில்அறியவேண்டும்.
அதனை எந்த வகையில் நாம வளரவிடாது, நிவர்த்தி செய்யலாம் என்றதை சிந்திக்கவேண்டும்.

அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

நல்ல நண்பர்களிடமோ, கணவன், மனைவியிடமோ, அல்லது தாய், தந்தை, சகோதரங்கள் இப்படி யாரிடமாவது எம் மனதை பாதிப்படைந்த விசயத்தை எடுத்துச் சொல்லி ஆறுதலடைய வேண்டும். அவர்கள் தரும் ஆறுதல் வார்த்தைகள் கூட எம் மன உளைச்சலைத் தவிர்க்கும் சக்தி கொண்டது.

ஒரு கப்பலில் துவாரம் ஏற்பட்டுவிட்டால்
உடனே அதனை அடைக்க ஆவன செய்ய வேண்டும்.

அதனை கண்டும் காணாது இருந்தால்....கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் கப்பலினுள் வந்து கப்பலே கடலினுள் மூழ்கி விடுமல்லவா...

"மனதில் கவலையை வளர்க்காதே
வளர்க்கும் கவலையால் மனஅழுத்ததிற்கு ஆளாகாதே".

அப்ப நான் போயிட்டு வாறன்....பிள்ளைகளே..

டாட்டா


--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"பொய்பேசாமை".

பிள்ளைகள் எல்லோரும் நலம் தானே...
இதற்கு முதல் " சந்தேகம்" பற்றி சொன்னனான் அல்லோ.
இன்றைக்கு பாருங்கோ நான் " பொய் பேசாமை" பற்றி சொல்ல வந்திருக்கிறேன்.

பாருங்கோ பிள்ளையள்...இந்த பொய் யார் யார் கிட்ட சொல்லவேணும், சொல்லக்கூடாது என்று இருக்கு செல்லங்கள்.

நேற்று ஒரு பையன் நம்ம சினேகிதன் மாதிரி என்று சொல்லலாம். ஆள் பார்க்க வாட்டசாட்டமாய் இருந்தான். என்கிட்ட வந்து...பாட்டிம்மா எங்க அம்மா அப்பா பொண்ணு பார்த்திருக்காங்க. நானும் அந்தப்பொண்ணை பார்த்திட்டேன்.
அட்ரா சக்கை . அப்புறம் இப்ப என்ன நெளிவு சுளிவுன்னு கேட்டேன்.

அதற்கு அவன் சொன்னான். பாட்டிம்மா நான் படிக்காதவன். அந்தப்பொண்ணு என்னமோ பிறீ எல்லாம்...அட தம்பி அது டிகிரீ

ம்...அதெல்லாம் முடிச்சுதாம். அந்தப்பொண்ணுக்கு படிச்சமாப்பிள தான் வேணுமாம். நானோ.....அந்தளவிற்கு போகல்ல.. எங்க அம்மா அப்பா பொய் சொல்லி கலியாணத்திற்கு சம்மதம் வேற வாங்கிட்டாங்க. எனக்கு இதில இஷ்டமில்ல. எதற்கு பொய் பேசனும்..?

ஆமா அதுதானே....எதுக்கோ..?

எல்லாம் சீதனம் தான்...

இத வச்சு பாரு்ங்கோ பிள்ளைகள்...எப்பவும் இப்படியான விசயங்களில் பையனும், பொண்ணும் மனசில ஒளிவு மறைவில்லாமல் நேரடியாக பேசனும். திருமண வயசு என்று வந்துவிட்டால்...பெற்றவங்களை மதிச்சாலும், சம்மந்தப்பட்டவங்க முன்னாடியே பொய் பேசாமல் உள்ளத்தில் உள்ளதை தெளிவா பேசிடனும்.

இதுபோக....நமக்கு தேவைப்படும் போது மாத்திரம் பொய் சொல்லலாம் பாருங்கோ. அதுவும் மற்றவங்கள பாதிக்காத வகையில பொய் பேசலாம்.

இதற்கு உதாரணமாக அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லாத போதும்...பிரயாணம் மேற்கொள்ள வேண்டி வந்தால்..அதற்காக பொய் பேசலாம். இன்னைக்கு போக்குவரத்து ஸ்ரைக் என்று.

அப்புறம் பாருங்கோ.....இன்னுமொரு விசயம். ..சின்ன வயசிலிருந்து அம்மாக்கள் பொய் சொல்லி, சொல்லிதான் சோறு ஊட்டுவாங்க..அதே பொய்யை பிள்ள வளர்ந்த பிறகு சொன்னால் செம அடிதான் கண்டியளோ..

ஆக......நாம சொல்லுகிற பொய்யால எத்தனை பேர் பாதிப்பாங்க என்றதை சிந்திச்சு...கூடிய வரையில உண்மை பேசி பொய்யை தவிர்த்து நடப்பது சாளச்சிறந்தது பிள்ளைகள்.

இருட்ரு பட்டு விட்டது செல்லங்கள். பொடி நடையாய் போயிட்டு வாறன் பிள்ளைகள்.

எல்லோருக்கும் நல்ல பொழுதாக அமையட்டும்.

டாட்டா


பொய்யே பேசமாட்டேன் என்று பொய் பேசாதே..
பேசும் பொய்யால் யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் பேசிக்கொள்.

" சந்தேகம்"

வாங்கோ பிள்ளைகளே....எல்லோரும் நலம்தானே...

ஏதோ வயசுபோன காலத்தில என் மூளையில இருக்கிற கொஞ்ச அட்வைசுகளை உங்களுக்கும் சொல்லலாம் என்றுதான் பொடி நடையாய் வந்திருக்கிறேன் கண்டியளோ..

ஏதோ இருக்கிற காலம் வரைக்கும் முடிஞ்சதை எடுத்து எழுதுறன் பாருங்கோ.. ..யாருக்காச்சும் இதில தப்பு துப்பு என்று இருந்தால் பாட்டியை பெருமனதோடு மன்னிச்சு மேட்டரை டப்புன்னு சொல்லிடுங்கோ...சரியோ....பிள்ளைகள்.

இன்றைக்கு " சந்தேகம் " எனறதை பற்றி சொல்லுறன்.

இது பாருங்கோ ஒரு பொல்லாத நோய். தானா வரும், மற்றவர்களின் கோல்மூட்டலாளும் வரும்.
இதனை மனதிற்குள் வச்சுக்கொண்டு சதா அதையே பற்றி யோசிப்பதால எதுவுமே முற்றுப்பெறாது.
நாம உடனே நமக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை தீர்த்து செயல்பட முன்வரவேண்டும். எடுத்தேன் கவுத்தேன் என்று தடாம், புடாம் என்று மற்றவர்கள் மனதை நோகப்படுத்தி சந்தேகத்தை தீர்ப்பது கூடாது.

யாருடைய மனதும் பாதிக்காத வகையில ஆறுதலாக எடுத்துச்சொல்லி...அன்பாகப்பேசி தீரவிசாரிக்கவேண்டும். நமக்கு ஏற்பட்டிருக்கும் நோயிற்கு வைத்தியரை நாடுவது போல நாமும் சம்மந்தப்பட்டவரையோ., அல்லது வீட்டில இருக்கும் பெரியவர்களையோ மதித்து இதனை பேசி தீர்க்கவேண்டும். நோயை வளர விட்டால் கேடு நமக்குத்தான் பாருங்கோ.

இந்த தீ யை அணைக்காவிட்டால்...என்ன நடக்கும்....ஒரு மூலையில் பிடிச்ச தீ..வீட்டையை அழித்துவிடுமல்லோ..

சரி...சரி...இனி வசதிப்படும்போது வாறன்...வந்து இன்னொரு அட்வைஸ் சொல்லுறன் சரியோ...அதுவரைக்கும்..பாட்டி என்றும் உங்களுடன்.


சந்தேகம் என்பது ஒரு தீ
அதை தீர்க்காவிட்டால் உன் கெதி அதோ கெதி.

சரி பிள்ளைகளே " விடிகின்ற பொழுது எல்லோருக்கும் நல்ல பொழுதாக அமையட்டும் "

அப்ப நான் போயிட்டு வாறன்...தட்டா...எல்லோருக்கும்..