Friday, December 19, 2008

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும்.....

இன்று உங்களிடம் " வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும் " என்ற வாக்கியத்தின் உண்மையை தெரிந்தளவிற்கு, அறிந்தளவிற்கு எடுத்துரைக்கலாம் என்று எண்ணியிருக்கிறேன்.

மானிடப்பிறவி எடுப்பதற்கே மாதவம் செய்திடவேண்டும்...அதிலும் பாருங்க..மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஒரேயொரு அறிவுதான் வித்தியாசம். அதிலும் இரு இனங்களையும் பிரித்துக்காட்டவேண்டுமானால் ஒரு சின்ன உதாரணம்.....மனிதர்கள் வாய்விட்டுச் சிரிக்கத்ததெரிந்தவர்கள்.


மிருகங்கள் அப்படியில்லை. யாரும் சிங்கம் சிரித்தது கண்டிருக்கிறேன், பூனையும் சிரித்தது கண்டிருக்கிறேன் என்றால் சந்தோசப்படுவேன்... ம்....எழுத வந்த விசயத்திற்கு வருகிறேன்....

நாம வாழ்க்கையில எத்தனையோ துன்பங்கள், இன்பங்கள் என்று அநுபவிச்சுக்கொண்டு வருகிறோம்...இதிலும் பார்த்தீர்களென்றால் எம்மை வாட்டுவது துன்பம்தான். இன்பம் வரும் போது முகமலர்ச்சிபெறுகின்றோம். எல்லோருடனும் மனச்சந்தோசமாக பேசுகின்றோம், எந்தக்காரியமாக இருந்தாலும் மகிழ்வோடு செய்கின்றோம்.இதற்குக்காரணம் மனமகிழ்ச்சி. இதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு பார்த்தால்...சிரிப்பு எவ்வளவு பெருமதிமிக்கது என்பது விளங்குகிறது..மனிதர்களிலும் எல்லோருக்கும் இந்தமாதிரியான மனமகிழ்வான சிரிப்புவந்து அமையாது.

சிலபேரைப்பார்த்தீர்களென்றால்....அவங்க பேசுவதிலே நகைச்சுவை கலந்து...மற்றவர்களை சிரிக்கப்பண்ணிக்கொண்டே நகைச்சுவையாகப் பேசிக்கொண்டேயிருப்பார்கள். அது அவர்களுக்கு கடவுள் கொடுத்தவரம் எனலாம். சிரிப்பதிலும், அடுத்தவரையும் சிரிக்கச்செய்து மகிழும் காணும் மனிதர்கள் இன்றைய அதிவேகமான உலகில் மிகவும் குறைந்து செல்லுகின்றது.


ஆனாலும் யாருமே கற்றுக்கொடுக்காத அந்த இயல்பான பண்புடையவர்கள் யாரானாலும் வாழ்த்தப்படவேண்டியவர்கள்..அவர்களைச்சுற்றி ஒரு அன்பான கூட்டம்தானாக உருவாகும்...அவர்களோடு தினமும் பேச மனம் ஏங்கும்...எந்தக்கவலையானாலும் அவர்கிளிடத்தில் சொல்லிப்போக்க மனம் அவர்களை நாடும்.சிலபேரைப்பார்த்தால் சிரிக்கவே மாட்டார்கள்.....உம் என்று அடம்பிடித்துக்கொண்டு இருப்பார்கள்....அவர்களும் நல்லவர்களேதான்....ஆனாலும் அவர்கள் முகம் அதனைக்காட்டிக்கொடுத்துவிடும்.

நீங்கள் எப்படியோ அறிந்துகொள்ளுங்கள் உங்களை நீங்களே...... இந்தச்சிரிப்பிலும் பலவிதங்கள் இருக்கின்றன....ஏளனச் சிரிப்பு, நக்கல் சிரிப்பு, நமட்டுச்சிரிப்பு, கொடுப்புக்குள் சிரிப்பு, இன்னும் பற்பல...நமக்கு வேண்டியதெல்லாம் மனமகிழ்வான சிரிப்பு மட்டும்தான்....இப்பொழுது அமேரிக்க டாக்டர்களாலேயே...நிரூபிக்கவிட்டது.....நோய்கள் உடம்பை தாக்காதிருக்க சிரிப்பும் ஒரு பயிற்சியாக மேற்கொண்டுவருவது சிறந்தது என்று..உண்மைதான்.ஒரு சின்னச் சம்பவம்....உங்களுக்கும் சிரிப்பு வந்தால் சந்தோசம்.

ஒரு பிறந்தநாள் விழாவைபவம்....அங்கே மேசைமீதிருந்த கரண்டிகள் என் கணவர் கையில் எடுத்துக்கொண்டார்.எங்கள் மேசையைச்சுற்றியிருந்த கதிரைகளில் இன்னுமொரு அறிந்த நண்பர்கள். குழந்தையோடு.....குழந்தையை நான் வைத்திருந்தேன்....அங்கே ஒலிபரப்பப்பட்ட பாடல் இசைபோதாது என்று கையில் வைத்திருந்த கரண்டிகளால் அந்த மேசையில் தாளம் போட்டார்.

என் கணவர்...குழந்தை சிரித்தது........9 மாதக்குழந்தை.......ரொம்ப நல்லா சிரித்தாள்..... .அதனைப்பார்த்து எல்லோரும் சிரித்தோம்....அதன் பிறகு எதற்கோ என் கணவர் மியூசிக் எழுப்புவதை நிறுத்திவிட்டு அவர்களோட பேச வாய் எடுக்க...அந்தக்குழந்தை அழுதிடிச்சு.......அட ஏன்டா அழுகிறது என்று எனக்கும் புரியவில்லை..குழந்தையின் அம்மா...வாங்கிக்கொண்டாங்க.அப்பவும் குழந்தை அழுகை நின்றபாடில்ல...எல்லாமே கொடுத்துப்பார்த்தோம் அழுகை நிற்கவில்லை.

மீண்டும் என் கைகளில் குழ்நதை....என் கணவர் கரண்டிகளை கையெலடுத்தார்......அட பாருங்க கப்புன்னு அழுகையை நிறுத்திடிச்சு.அப்புறமாத்தான் தெரிஞ்சது இவர் போட்ட மியூசிக்கில குழந்தை ரொம்ப மகிழ்சியடைஞ்சிருக்கு என்று....அப்புறம் என்ன இவர் குழந்தை தூங்கும் வரை ஒரே மியூசிக்தான்....இப்பநினைச்சாலும் சிரிப்பாகத்தானிருக்கு..

இதுபோல எத்தனையோ.குட்டிகுட்டி சந்தோசமான நிகழ்வுகள். சிரித்து மகிழ்பவன் மனசில எந்தக்கவலை வந்தாலும் அதிக காலம் இருந்து வாட்டப்போவதில்லை.. அன்பாகப்பேசுங்க....வாழ்வில் நடந்த சின்னச்சின்ன நகைச்சுவைகளை நினைச்சுப்பாருங்க.எழுதுங்க.........உங்கள் மனது மகிழ்வைப்போல மற்றவங்க மனசுகளையும் மகிழவையுங்க....போனதிற்காக வருத்தப்படாதீங்க...இருப்பதை எண்ணி சந்தோசப்படுங்க.....வாய்விட்டுச்சிரியுங்க.....நிஜமாக நோய்விட்டுப்போகுமுங்க....நல்ல நகைச்சுவைச் சம்பவங்களை உறவுகளோடு பேசிமகிழுங்க....இதயம்கனமாயிருக்காது நின்மதியாகக்கூட இருக்குமுங்க....அதற்காக தேவையில்லாததெற்காலாம் சிரிக்காதீங்க..பார்ப்பவன் பைத்தியக்காரன் என்றுவிடுவானுங்க....நகைச்சுவைப் படங்களைப் பாருங்க....மனம்விட்டு மகிழ்ந்திருங்க......நம்ம நிலாகூட மனங்கள் மகிழ்ச்சியாகயிருக்க நிலா டி.வி....யில நகைச்சுவைப்படங்களை இணைச்சிருக்கிறாரு......அதையும் பாருங்க...வாழ்க்கையை மகிழ்சியுடையதாக மாற்றிப்பாருங்க.....அதுவே நல்ஆரோக்கியமான வாழ்விற்கு சிறந்த வழிபாருங்க...

சரி பிள்ளைகளே மீண்டும் அடுத்த அட்வைசோடு உங்களைச் சந்திக்கமுன்பு எல்லோருக்கும் நல்ல பொழுதாக அமையவேண்டிவிடைபெறுகிறேன்.
உங்கள் அன்பு மதி.

குறள் ஒன்று..

இடுக்கண் வருங்கால் நகுக
அதனை அடுத்தூர்வது அஃதொப்பது இல். (621)

விளக்கம்:துன்பங்கள் வரும்போது மனம் தளராமல், நகைத்து ஒதுக்குக. துன்பங்களைக் கடப்பதற்கு அதனை விடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை.

Tuesday, December 2, 2008

" உடற் பயிற்சி "

சென்ற பொழுதுகளில் "இறப்பு" என்ற சொல்லோடு உங்களைச்சந்தித்தேன்....
இன்று உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமாகத் தேவைப்படும் பயிற்சி என்ன என்றதை விளக்குமுகமாக " உடற் பயிற்சி " என்ற சொல்லை தேர்ந்தெடுத்து கூற வந்துள்ளேன்..

நாம் ஆரோக்கியமாக வாழ உணவு மட்டும் முக்கியமானதல்ல...நமது உடலில் தேங்கியிருக்கும், தேவையற்றவற்றை கரைப்பதானால் உடற்பயிற்சி மிகவும் அவசியமானது. நான் தினமும் வேலை செய்கிறேனே....எனக்கு எதற்கு......? என்று கூறுவோருமுண்டு. நாம் இதைச்செய்வதால் என்ன பலன் என்று அலட்டிக்கொள்வோருமுண்டு...எல்லாவற்றிக்கும் காரணம் நமது மனம்தான். உடற்பயிற்சி செய்வதால் பல நன்மைகள் நமக்கு ஏற்படுகின்றது.

துரித இரத்த ஓட்டம், மூளை இயக்க வேகம் அதிகரித்தல், தசைகளின் இறுக்க நிலை, தேவையற்ற கொழுப்புச்சத்து கரைதல், தன்னநம்பிக்கை வளர்தல், பொலிவான தோற்றம், அதிகமான எடை குறைதல், தேவையற்ற கழிவுப்பொருட்கள் வெளியேறுதல், சோம்பல் இல்லாமை, வயது போனபின் வரும் உபாதைகளை தடுத்தல், சீரான சுவாசம் இப்படிப் பல பல நன்மைகளைப் பெறலாம்.உடல் மெலியவென மாத்திரைகளை நாடுவதும், தம்மைத்தானே வருத்துவதும், கவலையில் வாடுவதும் தேவையற்றதொன்றாகும்.

நம்மால் எந்தளவிற்கு உடற்பயிற்சி செய்யமுடியுமோ அதனை மட்டும் செய்ய வேண்டும்...காலையில் வழமையைவிடத் தினமும் அரைமணி நேரத்திற்கு முன்பாக எழுந்து இறுக்கமான உடை அணிந்து, காலுக்கு நல்ல சப்பாத்தும் அணிந்து கொண்டு ஓடுதல் சிறந்த உடற்பயிற்சியாகும்.இதைவிட நீச்சல் தெரிந்திருப்பின் வாரம் ஒரு தடவையாவது நீச்சல் உடற்பயிற்சி செய்வதும் மிகவும் உன்னதமானது. வயது போனவர்கள் ஓட முடியாது விட்டால் வேக நடைகூட மிகவும் பலன் தரும்.


உடற் பயிற்சி நிலையங்களைக்கூட வாரம் 3 முறை என நாடலாம். அல்லது வீட்டிலேயே சாதாரண உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். எல்லாவற்றிக்கும் மேலாக விரும்பிய பாடல்களைப்போட்டுவிட்டு ஆடி மகிழ்வதே சிறந்த உடற்பயிற்சியாகும்.நன்றிகள் பிள்ளைகளே..... இதுவரை எழுதியதே அதிகம். அதனால அனைவருக்கும் நல்லபொழுதாக அமையவேண்டி பாட்டி அடுத்த அட்வைசுடன் சந்திக்கிறேன்...



எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல். (489)

விளக்கம்:
கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்தபோது, அப்போதே, நாம் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்து வெற்றிபெற வேண்டும்.

***************************************************
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி.